Sunday, May 13, 2012

நித்தியானந்தாவும் பறக்கும்தட்டும்....


நித்தியானந்தா ஆதீனம் ஆனாலும் ஆனார், எல்லோர் வாய்க்கும் ஓட்ஸாகவே அது மாறிப்போனது. அதிலும் நான் மனநல மருத்துவன் என்ற காரணத்தால் இவ்வளவு நடந்தப்பின்னும் அவரை நம்புபவர்களுக்கு என்னதான் பிரச்சனை என்பது போன்ற கேள்விகளை அடிக்கடி சந்திக்கிறேன். இதை கேட்பவர்களின் அடிப்படை சந்தேகம் - இத்தனைக்கும் பின்னும் எப்படி இதுப்போன்ற ஒருவனை நம்ப முடியும் என்ற ஆச்சர்யமே...

இதற்கு காரணம் உள்ளதா????... இது நித்தியானந்தா என்ற தனிமனிதனின் "Charisma" என்று மட்டுமே சொல்ல முடியுமா?.... இதெற்கெல்லாம் விடை தெரிய வேண்டுமானால் உங்களுக்கு ஒரு பறக்கும் தட்டின் கதை தெரிய வேண்டும்.

1954ஆம் ஆண்டு. அமெரிக்காவில் மரியன் கீச் என்ற பெண்மணி ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கிறார். அதன் அடிப்படை நம்பிக்கை அவருக்கு வந்த ஒரு கனவு. அதில் வேற்றுக்கிரகவாசிகள் அவரை தொடர்புக்கொண்டு டிசம்பர் 21 ஒரு பெரும் வெள்ளம் ஏற்பட்டு உலகம் அழியப்போகிறதென்றும் அதற்குள் அவரிடம் வந்து சேர்பவர்களை அந்த வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டில் வந்து காப்பாற்றுவார்கள் என்றும் கூறியதாக உலகத்துக்கு அவர் தெரிவிக்க அவர் வீட்டில் இடம் பிடிக்க பணம் கொண்டு வந்து கொட்டி பலர் சேர்ந்தனர். அவர்களில் ஒருவர் லான் ஃபெஸ்டிங்கர்(Leon Festinger) என்ற உளவியல் ஆராய்ச்சியாளர். அவர் இந்த கூத்தின் முடிவை காண்பதென்ற நோக்கத்துடன் வந்தவர். அந்த தினமும் வந்தது.

இரவு 12 ஆனது. அங்கிருந்த அனைவரும் சற்றே கலக்கம் அடைய துவங்கினர். நேரம் ஆக ஆக அனைவருக்கும் உண்மை உரைத்தது - "எந்த பறக்கும் தட்டும் வரப்போவதில்லை. உலகம் நாளையும் இருக்கும் நாளை மறுநாளும் இருக்கும்." என்று.

உடனே அவர்கள் மரியன் கீச்சை தூக்கிப்போட்டு உதைத்திருப்பார்கள் என்று நீங்கள் எதிர்ப்பார்த்திருக்கலாம். ஆனால் நடந்ததோ வேறு...

உலகம் அழிய ஒரு மணி நேரமிருக்கையில் மரியன் கீச்சுக்கு ஒரு புது செய்தி அயல்கிரகவாசிகளிடமிருந்து வந்தது. இந்த பூமியில் அவர்கள் சொல்லை மதிக்கும் மனிதர்கள் இருப்பதால், இதற்கு மற்றுமொரு வாய்ப்பு தர தீர்மானித்து வெள்ளத்தை சற்றே திசைத் திருப்பி விட்டார்கள்!!! என்று... இதை கேள்விப்பட்ட அந்த கூட்டம் இந்த நல்ல செய்தியை பரப்பி இன்னும் அதிகம் பேரை நம்ப வைத்து இந்த உலகத்தின் ஆயுளை நீடிப்பதேன்று கிளம்பி விட்டனர்.!!!!!!!!!!

இதற்கு லான் ஃபெஸ்டிங்கர் கொடுத்த பெயர்தான் - காக்னிடிவ் டிஸ்சொனன்ஸ் (Cognitive Dissonance).  பல்லையுடைப்பது போன்று இருந்தாலும் இது ஒரு வகையில் நமக்கு அறிமுகமான ஒரு விஷயமே. திராட்சைப்பழத்துக்கு ஆசைப்பட்ட நரியின் கதை கூட இதற்கு ஒரு உதாரணம்தான்.

நித்தியானந்தாவுக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா....

மனித வாழ்வில் உள்ள நிலைகள் மாறுமென்பதை ஏற்றுக்கொள்ள மனிதர்களுக்கு ஒரு ஆதாரம் தேவைப்படுகிறது. நித்தியானந்தா, மரியன் கீச் போன்றவர்கள் பக்தியாகவோ பறக்கும் தட்டில் வந்து அழைத்து செல்லும் அயல்கிரகவாசிகளாகவோ அந்த ஆதாரத்தை தருகின்றனர். அதனால்தான் அவர்கள் உலகம் அழியும் என்றாலோ ஹீலிங் டச் முலம் வியாதிகள் குணமாகும் என்றாலோ உடனே நம்புகின்றனர். ஏதோ ஒரு தருணத்தில் இவர்கள் சொல்லும் விஷயம் பொய்க்கும் போது நிலை மாறுமென்ற ஆதார நம்பிக்கையும் கேள்விக்குறியாகின்றது. ஆனால் மனம் அதை ஏற்க மறுக்கிறது – காரணம் அதை ஏற்பதென்பது வாழ்வின் அடிப்படையே தகர்க்கிறது. இதே கஷ்டங்கள்தான் நீடிக்குமென்றால் வாழ்வதின் அர்த்தம்தான் என்ன? இந்த முரண்பாட்டைதான் காக்னிடிவ் டிஸ்சொனன்ஸ் (Cognitive Dissonance) என்கிறார் லான் ஃபெஸ்டிங்கர்.

இதை தீர்ப்பதென்பது எப்படி? அவர்களுக்கு மூன்று வழிகள் உள்ளது.

எந்த நம்பிக்கை முரண்பாட்டை ஏற்படுத்துகிறதோ அதை மாற்றிக்கொள்ளலாம்.. (எந்த சாமியார் உண்மையா இருக்கான்... இவனால மட்டும்தான் என் கஷ்டத்தை தீர்க்க முடியுமா என்ன... பறக்கும் தட்டாவது வரதாவது...) ஆனால் இதுதான் இருப்பதிலே கடினமான வழி. இதை அவர்கள் செய்தால், இந்த பதிவுக்கே அவசியமில்லை.

அந்த நம்பிக்கையுடன் புது நம்பிக்கைகளை சேர்த்து புதியதொரு நம்பிக்கையை உருவாக்கி கொள்வது. ( பிரம்மச்சார்யம் என்பதை கடைப்பிடிக்க முடியாதவர்கள் துணை ஏற்று கொள்வது தப்பில்லை. அதும் பிரம்மச்சார்யத்தின் ஒரு அங்கம்தான்.(!!!!!!!!) பறக்கும் தட்டு நம்புபவர்கள் இருப்பதால் வரவில்லை. அதனால் இந்த செய்தியை பரப்பி எல்லாரையும் நம்ப செய்வது நம் கடமை.)

கடைசியாக அந்த முரண்பாட்டை ஏற்க மறுத்தோ அது ஒன்னும் பெரிய விஷயமில்ல என்று சமாதானம் கூறியோ அதன் முக்கியத்துவத்தை குறைத்துக்கொள்ளலாம். (அந்த டேப் பொய்... அவர் என்னைக்காவது நான் பிரம்மச்சாரின்னு சொல்லிருக்காரா..)

இப்பொழுது யோசியுங்கள்... நித்தியானந்தா என்று மட்டுமில்லை. எத்தனை விஷயங்களில் நம்மை நாமே இதுப்போன்று ஏமாற்றியுள்ளோம். நித்யானந்தா ஒரு நம்பிக்கை. அதேபோல்தான் தம் அடித்தால் டென்ஷன் குறையும், தண்ணி அடித்தால் கவலை மறக்கும், பைனான்ஸில் பணம் போட்டால் பணம் சீக்கிரம் பெருகும் என்பதெல்லாம். தினம் வாழ்க்கையில் தவறென்று தெரிந்தும் ஏற்க மறுப்பது எத்தனை... நம் முரண்பாடுகளை ஏற்று அவற்றை மாற்றும் முதல் வழியை தேர்ந்து எடுக்கும் தைரியம் உண்டா நமக்கு...

அடுத்த முறை இதுப்போன்ற ஒரு சந்தர்ப்பம் உங்கள் வாழ்வில் ஏற்பட்டால் இதை சிந்தனை செய்யுங்கள் நண்பர்களே...

5 comments:

  1. Thank you sir. Vaazhga Valamudan.

    ReplyDelete
  2. NICE WRITING....BOSS..EXECLLENT ANALYSIS....EXPECTING MORE...FROM YOU..

    ReplyDelete
  3. உற்சாகம் தந்தமைக்கு நன்றி....

    ReplyDelete
  4. நன்றாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மிக அருமையான பதிவு டாக்டர்

    இது போலவே சமூகத்தில் நடப்பது, அதன் பின்னால் உள்ள உளவியல் பற்றி இன்னும் நிறய எழுத்துங்கள் டாக்டர்.. இந்த ஏரியா இணையத்தில் வேகண்ட்டாகவே இருக்கிறது.

    ReplyDelete

உங்கள் சிந்தனைகளையும் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...