Wednesday, February 27, 2013

சுஜாதா நினைவலைகள்...

"துள்ளல் ஒசைத்தாய், நேரீற்றியற் சீரும், நிறைனடுவாகிய வஞ்சியுரிச் சீரும் வாராது, நிறை முதலாகிய வெண்பா விரிச்சீர்மிக்கு. நேரடித்தாய்க் கலித்தளையும் சுயற்றளையுந் தட்டுத்தரவு. தாழிசை எண்ணும் முதல் உறுப்பும் அராகம், அம்போதரங்கம். தனிச்சொல், சுரிதகம் எண்ணும் துணை உறுப்பும் உடைத்தாய் ஒத்தாழிசைக்கலி...."

மன்னிக்கவும். தமிழ்நடை எவ்வளவு மாறியிருக்கிறது என்பதை விளக்க இந்த வாக்கியம் (இன்னும் வாக்கியம் முடியவில்லை) யாப்பருங்கலக் காரிகைக்கு குணசேகரர் என்பவர் இயற்றிய உரையிலிருந்து எடுக்கப்பட்டது .

இத்துடன் ஒப்பிட, "நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னையன்றி இலை" என்கிற ஆழ்வார் வரிகளையும்,
எங்கேயோ நாய் ஒன்று குரைத்தது. அதைக் கேட்டு விட்டு இன்னொரு நாய் வேறு தெருவில் குரைத்தது. இரண்டும் வெகு தூரத்திலிருந்து  வந்தது. எதிர் வீட்டு வாசலில் மாட்டின் கழுத்து மணியோசை கேட்டது. விழுந்து வணங்குவது போல் ஒரு கூண்டு அரைவண்டி அவிழ்த்து விடப்பட்டிருந்தது. அதன் காலில் கட்டியிருந்த மாடுகளின் மணி சோம்பலுடன் ஒலித்தது..."
என்று மோகமுள் நாவலில் தி. ஜானகிராமன் நம் ஊர் கிராமத்தின் தூக்கமில்லாத இரவின் Mood ஐ சித்தரிக்கும் வரிகளையும் பார்க்கும் போது தமிழ்நடை சில நூற்றாண்டுகளில் வேகமாக வளர்ந்திருப்பதைக் காணலாம். தமிழ் வளரவில்லை, வளரவே இல்லை, தேங்கியே இருக்கிறது என்று பல்லவி பாடும் விமர்சகர்கள் தம் ஆயுளுடன் தமிழ் மொழியை ஒப்பிட்டு பார்க்காமல் பல்லாயிரம் ஆண்டுள்ள மொழியின் ஆயுளை வைத்துப் பார்க்க வேண்டும்.

எழுதிய வருடம் - 1966.

இத்துடன் 2005ல் சுஜாதா எழுதிய தன் எழுபது வயது நிறைவடைவதை பற்றிய  விகடன் கட்டுரையையும் படித்துப் பாருங்கள். தமிழ் நடையை எவ்வளவு தன் வாழ்நாளில் மாற்றியுள்ளார் என்று புலப்படும்.

இன்றுடன் தமிழ் அவரை இழந்து ஐந்து வருடங்களாகின்றன.

மாற்றம் மட்டுமே சாஸ்வதம் என்பதை புரிந்து இறக்கும் வரை அந்தந்த காலக்கட்டத்திற்கு தன்னை மாற்றிக் கொண்ட அவரை போன்ற இன்னொருவர் வருவாரா?

ஒரு வேளை இந்த ஒரு இழப்பு மட்டுமே சாஸ்வதமோ????....

1 comment:

  1. //பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்த மக்களை உறிஞ்சிக்கொண்டு சென்றது அந்த பஸ்// சுஜாதாவிவின் வரிகள். இப்படி எல்லா மொழிகளிலிருந்தும் வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தால் தமிழ் இன்னும் நன்றாக வளர்ந்திருக்கும்(ஆங்கிலத்தை போல).

    ReplyDelete

உங்கள் சிந்தனைகளையும் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...